குழந்தை இன்மையை மையப்படுத்திய கதை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியர் திரவ், இஸ்மத் பானு. இவர்களுக்கு குழந்தை இல்லை. கிராமத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் அவர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்பதாக ஊர் பேசும். அப்படியான வார்த்தை வதைகளைத் தாண்டி குழந்தைக்காக இந்தத் தம்பதி என்னென்ன செய்தது என்பதே படத்தின் கதை
நாயகனாக திரவ் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். தாழ்வுமனப்பான்மையும் ஆணாதிக்கமும் நிறைந்த மனிதனை நம் கண்முன் நிறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறார். இஸ்மத் பானு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பானு நடிப்பில் ஒருபடி மேல் சென்று நம்மோடு கனெக்ட் ஆகி கலங்கச் செய்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தேவ் ஹபிபுல்லா, மாஸ்டர் கார்த்திகேயன், விஜயலக்ஷ்மி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு
சங்கர் ரங்கராஜன் தன் இசையால் படத்தின் கதைக்கு பெரும் உதவி செய்துள்ளார். திரவ் தான் படத்தை எடிட் செய்துள்ளார். படத்திற்குள் இன்னும் சில டீடைலிங் ஷாட்களை அடுக்கியிருக்கலாம். பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு சிவகங்கை நேட்டிவிட்டியை நம் கண்களுக்குள் பதிவு செய்துள்ளது
இன்றும் கிராமங்களில் குழந்தையின்மை என்ற ஒற்றைக்காரணத்திற்காக பெண்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளார் இயக்குநர் பஸ்கால் வேதமுத்து. ஆழமான கதை என்பதை விட, சமூகத்திற்கு தேவையான கதை இது. இன்னும் நிறைய விசயங்களைப் பதிவு செய்து அதை சரியான திரைக்கதை ஆக்கியிருந்தால் ஒரு ஆகத்தரமான படமாக மாறியிருக்கும் இப்படம். இருப்பினும் நல்ல முயற்சி இந்த வெப்பம்-குளிர்- மழை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்