நம் சுயத்தை தேட வைக்கும் தரிசனங்கள்.. ஒவ்வொரு கவிதையிலும் தனித்த அழகியல்❤️👌
காதலைப் பாடும் போதும், கடவுளைப் பேசும்போதும், காமத்தைச் சொல்லும் போதும், கடலை, ஆற்றை, மனதை, என பாடுபொருளாக எதைக் கொண்டாலும் அதில் ஒரு தனித்துவமும் சிலிப்பும் ஏற்படும் படியாக அமைந்துள்ளது சுகுமாரனின் கவிதைகள். பிக்பாஸில் கமல் பரிந்துரைத்த நூல் என்பதால் பேராவல் கொண்டு வாங்கினேன். 334 பக்கங்களும் வொர்த்து தான். பல கவிதைகளை சில நிமிடங்கள் அசை போட்டுத்தான் புரிந்துகொள்ள முடியும். அப்படியான கவிதைகளின் சொற்களோடும் உள்ளடக்கத்தோடும் சற்று நேரம் நாம் போராடி உள்வாங்கும் போது தான் கவிஞனோடு சேர்ந்து நாமும் கூட்டுப் படைப்பாளியாகிறோம்..
நாம் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியவற்றைப் பார்க்கும் போது நிச்சயமாக இன்னும் எழுத்து நடையை, வார்த்தைகளை மாற்றியிருக்கலாம் என்று தோன்றும். இதில் சுகுமாரனின் 40 ஆண்டுகால கவிதைகள் இருக்கின்றன. 39 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்கும் , 40 ஆவது ஆண்டு எழுதப்பட்டவைக்கும் துளி வேறுபாடில்லை. அதே தரம்..அதே திறம். சுகுமாரனின் தன்மை மாறாத மொழியாளுமைக்கு தலை வணங்குகிறேன்.
இருவர் வாழ்வில் ஒரு உலகம் இருந்தால் தான் இன்பம் நிலைக்கும். அந்த ஒரு உலகமும் இருவருக்கும் சமம் செய்வதாக இருக்க வேண்டும். அந்தக் கணக்கில் பிணக்கு ஏற்பட்டால் வேறோர் உலகம் தோன்றிவிடும், அதை,
“உனக்கு என்று ஒரு உலகம்
எனக்கு ஒன்று ஒரு உலகம்
நீயோ அல்லது நானோ
நம்மில் யார் செய்த தவறோ
காலம் விழுங்கிக் காணாமல் போனது நமது உலகம்” என்கிறார் சுகுமாரன்
“உண்மை ஊர்ந்து நகரும்
பொய் ஊடுருவிப் பாயும்” எனும் சுகுமாரனின் வரிகளில் இருந்தே, “உண்மை நடக்கும் பொய் பறக்கும்” எனும் வசனம் வதந்தி வெப்சீரிஸில் வந்திருக்கும் போல. இவை மட்டுமல்ல இன்னும் நிறைய வார்த்தைகள் அதிலிருந்து வேறோன்றை எழுதத் தூண்டுகிறது. ஒரு நல்ல படைப்பு மட்டும் தான் வாசிப்பவரையும் படைக்கத் தூண்டும்.
“நோக்கத்தில் பிழை இல்லை
செயலிலும் குறை இல்லை
எனினும் சின்னத் தவறு நேர்ந்து விட்டது
வண்ணத்துப்பூச்சிக்காய் நீ வீசியது- மீன்வலை” என்ற கவிதையை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்
முத்தம் பற்றி ஒரு கவிதை.. அதை முடிக்கும் போது, “நான் வாங்கிய அல்லது கொடுத்த முத்தத்திற்கு என்ன வாசனை?” என்று முடித்திருந்தார்
எனக்கு என் தாத்தா எச்சில் ஒழுக ஒழுக வாரியணைத்துக் கொடுக்கும் ஈரமுத்தம், எப்போதாவது மீசை முடி குத்தி வலிக்கும் அப்பாவின் முத்தம், வாஞ்சையோடு அள்ளித் தந்த அம்மாவின் முத்தம், திருநங்கையாக மாறுவதற்கு முன்பாகவே அந்தத் தொனி கலந்த அன்போடு தந்த நண்பனின் முத்தம், 2006 பஞ்சாயத்துத் தேர்தலில் பெரியப்பா பெற்ற வெற்றியால்..அதற்காக உழைத்ததால் பெற்ற சித்தி, பெரியம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் எனப்பலரிடமும் பெற்ற முத்தம், எனக்கு அய்யாவழியை ஆற்றுப்படுத்திய பார்வதியம்மாவின் பக்தி முத்தம் என நிறைய முத்தங்கள் நினைவுக்கு வந்தன. இன்னும் சில ரகசிய முத்தங்கள் கூட உண்டு. அந்த முத்தங்களுக்கு சத்தமும் யுத்தமும் அதிகம் என்பதால் சொல்ல முடியாது. மேலும் பெறப்பட்ட/ கொடுக்கப்பட்ட முத்தங்களை விட அந்தத் தருணங்களை வேண்டி கற்பனையில் பெற்ற/ கொடுத்த முத்தங்கள் ஒரு கோடி இருக்கும். ஒரு முத்தம் செய்யும் செயல்களை எளிதில் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு முத்தத்தில் ஒரு வாழ்வு ஒளிந்திருப்பதை நினைவூட்டிய சுகுமாரனின் முத்தக் கவிதைக்கு மட்டும் லட்சம் முத்தம் இடுவேன்
கவிதை வாசிப்பு மட்டும் அவசர கதியில் கூடாது என்பதையும் உணர்த்தினார் சுகுமாரன்.. நிதானமாக வாசித்தால் கவிதையில் வாழகூட முடியும். யெஸ் நான் வாழ்கிறேன்…😘
#சுகுமாரன்கவிதைகள் #SukumaranKavithaikal