ஒரு படத்தின் ஆடியோ லாஞ்சில் யாராவது ஒருவர் சர்ச்சை வெடியைப் பற்றவைத்தாலே அது தாறுமாறாகப் பத்திக்கும். நேற்று நடைபெற்ற புறநகர் படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய அனைவருமே ஒவ்வொரு பட்டாஸை கொழுத்திவிட்டார்கள். தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் முதலில் பேசும்போது, “அஜித் தன் முதல் பட தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கத்தை கண்டுகொள்ள வில்லை” என்று தன் ஆதங்கத்தைச் சொல்ல, அடுத்து பேசிய இயக்குநர் தருண்கோபி “இங்கு சாதிப்படம் என்ற பெயரில் ஒரு குருப் சுத்துகிறது” என்று இயக்குநர் பா.ரஞ்சித்தை ஒரு சாடு சாடினார். அடுத்துப் பேசிய வீ.சேகர், ஆர்.வி உதயகுமார் ஆகியோர் எல்லாம் சினிமாவில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளைப் பற்றியும் அந்தப் பிரச்சனைக்கு பின்னால் பெரிய நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட சில விசயங்கள் இருக்கின்றன என்பதையும் பேசி அரங்கத்தை அதிர வைத்தார்கள். அடுத்துப் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், “தமிழன் வென்றே தீருவான்” என்று முழங்கி முடிக்க இறுதியாகப் பேசிய மன்சூர் அலிகான், பேசியவர்களைப் பற்றி எல்லாம் பேசிவிட்டு இனி பேச ஒன்றுமில்லை என்று சொல்லி ஜனகனமண பாடி தெறிக்க விட்டுட்டார்.
பாவம் கடைசி வரைக்கும் பணம் போட்டு நிகழ்ச்சி நடத்திய தயாரிப்பாளர் & ஹீரோவான கமல் கோவிந்த் நாத் பேசவே இல்லை. படத்தின் இயக்குநர் மின்னல் முருகனும் தான். சரி விடுங்க..எப்படியும் உங்க படம் பேசும் அது போதும் என்று சமாளித்தார் படத்தின் PRO