Tamil Movie Ads News and Videos Portal

RRR படத்தின் பாடல் விழா!

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.

இயக்குநர் S S ராஜமௌலி பேசியதாவது…

சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.” என்றார்