Tamil Movie Ads News and Videos Portal

ரயில்- விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பின் மனிதம் பேசும் ஒரு சினிமா

மதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நாயகன் குங்குமராஜ் குடியே கெதி என வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி வைரமாலா கணவரின் குடியின் காரணமாகவே குழந்தை வேண்டாம் என இருக்கிறார். இத்தம்பதி வசிக்கும் வீட்டில் ஒரு போர்ஷனில் வடநாட்டைச் சேர்ந்த பர்வேஸ் மெஹ்ரூ வாடகைக்கு குடியிருக்கிறார். அவர் உழைப்பு உண்மை அன்பு என இருக்கிறார். வட நாட்டு தொழிலாளி ஆன அவர் மீது எப்போதும் பொறாமை உணர்ச்சி கொள்கிறார் நம் நாயகன். அதன் உச்சமாக ஒரு சம்பவம் நடக்க, அதைத் தொடர்ந்து ஒரு இறப்பு நிகழ்கிறது. அந்த இறப்புக்கான பொறுப்பாளி யார் என்பதும், இறப்பு உணர்த்தும் மனிதம் குறித்தும் படம் பயணிக்கிறது

கதாநாயகர்களை நாடாமல் கிடைத்த நடிகர்களை எல்லாம் கதையின் நாயகர்களாக மாற்றியுள்ளார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. அனைவரிடமும் நல்ல நடிப்பையும் வாங்கியுள்ளார். துளியும் செயற்கைத் தனமில்லாமல் நடித்துள்ளார் நாயகன் குங்குமராஜ். நாயகி வைரமாலா பெயருக்கேற்றாப் போல் ஜொலிக்கிறார் நடிப்பில். கதையின் முக்கிய பாத்திரமான பர்வேஸ் மெஹ்ரூ நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். தங்கமணி பிரபு உள்பட அனைவரும் எதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவில் கதையின் மென்மையும் உண்மையும் உடையாமல் பார்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரர். S.J. ஜனனியின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. இரண்டு பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. தமிழ்சினிமாவிற்கு ஒரு பெண் இசை அமைப்பாளர் தனது வரவை நல் வரவாக பதித்துள்ளார்.

எடுத்துக்கொண்ட கதையில் நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது. இயக்குநர் பாஸ்கர் சக்தி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் எழுத்தாளர் என்பதால் அவருக்கு அது வாய்த்திருக்கிறது. படத்தின் உரையாடல்களும் ஆழமாக உள்ளது. ஆனால் ஒரு திரைக்கதையாக ரெயில் தனது பயணத்தை இன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். கதையில் இலக்கு என்ன என்பதை கண்டெடுக்கவே வெகுநேரம் பிடிக்கிறது. என்ன தான் எதார்த்த சினிமா என்றாலும் ரசிகனுக்கு என்கேஜிங் ரொம்ப முக்கியம். அதைச் செய்யத் தவறியுள்ளார் இயக்குநர். எந்தக் கேரக்டருக்குள்ளும் எமோஷ்னலாக பயணிக்க இயலவில்லை. இருப்பினும் படம் எடுத்துக்கொண்ட கதையும் சொல்லப்பட்ட கருத்தும், திரையில் விதைக்கப்பட்ட மனிதமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அதனால் இந்த ரயிலில் ஒருமுறை பயணிக்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்