Tamil Movie Ads News and Videos Portal

புதிய வரலாறை உருவாக்கிய பதான்!

அலைமோதும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க இந்தியா முழுவதும் பதான் படத்திற்காக நள்ளிரவு 12 30 மணி காட்சிகளை இணைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸ்.மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் இன்று வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது. (ஜன-26) குடியரசு தின விடுமுறையாக என்பதால் படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று முதல் நள்ளிரவு 12.30 மணி காட்சியை இந்தியா முழுவதும் திரையிடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 8000 திரைகளில் மிகப்பெரிய அளவில் திரையிடப்படும் இந்திப் படம் என்கிற பெயரை பதான் திரைப்படம் பெற்றுள்ளது.ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் என நாட்டின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களை கொண்டுள்ளதுடன், பதான் திரைப்படம் ஆதித்ய சோப்ராவின் லட்சியமான ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகவும் உருவாகி உள்ளது.

பதான் படத்திற்கு உருவான எதிர்பார்ப்பு இதுவரை திரையுலகம் கண்டிராதது. படத்தின் டீசர், “பேஷரம் ரங்” மற்றும் “ஜூமே ஜோ பதான்” என்கிற இரண்டு பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரைலர் என இந்தப்படம் தொடர்பாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அனைத்துமே இணையதளத்தை அதிர வைத்தது.அதுமட்டுமல்ல.. இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இணைந்தது தான், இந்தப்படம் குறித்து இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாக மற்றுமொரு மிகப்பெரிய காரணம்.. ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் என இந்த இருவரும் இணைந்து நடித்த படங்களின் மூலம், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகம் விரும்பப்படும் குறிப்பிட்ட சில திரை ஜோடிகளில் ஒன்றாகவே இவர்களும் கருதப்படுகின்றனர்.