நடிகர் திலீப் விவகாரத்தில் தான் முதன் முறையாக பெரும்பாலான தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மஞ்சு வாரியர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்ததற்குப் பின்னர் அவர் பட்டி தொட்டி எங்கும் தெரிந்த முகமாகிவிட்டார். தமிழில் அவரது நடிப்பைப் பார்த்தவர் சற்று மிரண்டு தான் போயிருப்பார்கள். ஏனென்றால் ஆரம்ப காலத்தில் இருந்தே மலையாள திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால்
தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர் கூட்டத்தையும் சம்பாதித்தவர் மஞ்சு வாரியர் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட மஞ்சு வாரியர் இத்தனை ஆண்டு காலமாக ஒரு படத்தில் கூட மலையாள உலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்காதது என்பது ஒரு ஆச்சரியம் தான். அவர் தற்போது முதன்முறையாக மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். புதுமுக இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு த்ரில்லர் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதில் இன்னொரு நாயகியாக தம்பி படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த நிகிலா விமல் நடிக்கவிருக்கிறார்.