வயது முதிர்ந்த கிழவன் எண்பத்தி நான்கு நாட்களாக மீன் பிடிப்பதில் தோல்வுறுகிறான். கிழவனோடு பயணித்தச் சிறுவன் ஒருவன் நாற்பதாவது நாளில் கிழவனிடமிருந்து பிரிந்து விடுகிறான். கிழவன் ராசியற்றவன் என்பதால் சிறுவனின் குடும்பத்தார் எடுத்த முடிவு அது. தன்னந்தனியே வாழ்வு கடத்தும் கிழவன் தன் படகோடு மீன் பிடித்தே தீருவது என கடலுக்குள் செல்கிறான்
அந்த ஆழியுலகு கிழவனை கேலிப்படுத்த எண்ணி நிறைய தடைகளை கொடுக்கிறது. கிழவனின் தன் முனைப்பும், நிதர்சனம் புரிந்த அவனின் அனுபவமும் தடைகளை வெல்ல வைக்கிறது. இதுவரை யாருமே பிடித்திராத மிகப்பெரிய மீன் ஒன்று கிழவனுக்குச் சிக்குகிறது. அந்தத் திரைகடல் நடுவே கிழவன் மீனோடு திரும்ப எத்தனிக்கையில் , அந்த மீனை வேட்டையாட சுறாக்கள் வருகின்றன. தன் வேட்டை உயிரான மீனைக்காப்பாற்ற சுறாக்களோடு கிழவன் மோதுகிறான். அதன்பின் கிழவனின் போர்களும், தன்னை உடைத்து வெற்றி தோல்வி கடந்து கிழவன் கரை சேர்வதும் தான் கதை..
இந்தக் கதையில் கிடைக்கும் மிக முக்கியத் தரிசனம், “வாழ்வை எதிர்கொள்ளும் கலை தான்”
“உன்னால் எதைச் செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்கிறார்களோ. அதைச் செய்து காட்டுவது தான் மிகப்பெரிய இன்பம்” என்பது நபிகள் நாயகம் வாக்கு
அந்த வாக்கிற்குச் சான்றாய் இருக்கிறது கிழவனின் பயணம். இந்தப் பூதவுடலை இயங்க வைக்கும் உயிர் எந்த நொடிவரை இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நிதர்சனம் அப்படி இருப்பதால், போராட்டங்களின் முடிவில் வெற்றி வந்தால் தான் வாழ்வை ருசிப்பேன் என்றிருக்க கூடாது. அந்தப் போராட்டங்களிலே வாழ்வை அனுபவிக்க பழகணும் என்கிறான் கிழவன். தின்னும் உணவுக்கான போராட்டத்திலும் கிழவனால் படகில் வந்தமரும் பறவையோடு பேச முடிகிறது. அந்தி வானத்தின் பேரழகை ரசிக்க முடிகிறது. ஆண் மீன் பெண் மீன்களின் அந்தரங்க பாஷையை உணர்ந்து மகிழ முடிகிறது. தான் வேட்டையாடிய மீன் இறக்கும் வரை மீனோடு பேசிய கிழவன், அந்த மீன் சுறாக்களால் மரணித்து பாதியாக ஆனபிறகு, “பாதிமீனே” என்றழைத்துப் பேசுகிறான். அந்த இடம் நெகிழச்செய்யும்
மிகச்சுலபத்தில் கடந்து விடும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் மிகச்சுலபமானவற்றை மட்டும் பதிந்து செல்லக்கூடாது என்ற உந்துதலையும், எத்தனை சுறாக்கள் வந்தாலும் படகை செலுத்தும் கிழவன் போல இன்னல்களை எதிர்கொண்டு இலக்கை அடையணும் என்பதையும், சொல்கிறான் கிழவன். வாழ்வில் மகிழ்ச்சி, போராட்டம் எனத்தனித்தனியாக இருப்பதில்லை. எல்லாமும் ஒரே வாழ்க்கைக்குள் அடங்கி இருக்கிறது. மகிழ்ச்சியில் இருந்து கவலையை உருவாக்க முடியும். கவலையில் இருந்து மகிழ்ச்சியையும் படைக்க முடியும். தன் வாழ்வை படைக்கும் படைப்பாளன் நாம் என்பதை உணர்த்துவதாக அமைந்தது இந்நூல்
எம். சிவசுப்ரமணியன் அவர்களின் மொழி பெயர்ப்பு ஆகச்சிறப்பு
நூலில் மெச்சத்தகுந்த வார்த்தைகள் நிறைய இருக்கின்றன..எனக்குப் பிடித்த ஒன்று,
“என்னை அழிக்க முடியும்..தோற்கடிக்க முடியாது”