பணத்தை விட பாரம்பரியமே பெரிது என்கிறது கட்டில்
விதார்த் மூலம் படத்தின் கதை ஓப்பன் ஆகிறது. ஒரு பாரம்பரியமிக்க வீடு நாயகன் கணேஷ்பாபுவின் வீடு. ஒரு மகன், கர்ப்பிணி மனைவி, மற்றும் அம்மாவோடு அவ்வீட்டில் வசித்து வருகிறார் கணேஷ்பாபு. அந்த பாரம்பரிய வீட்டை கணேஷ்பாபுவின் உடன் பிறந்தவர்கள் விற்க முனைகிறார்கள்..அந்த வீட்டில் 200 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கட்டிலை விற்கக்கூடாது என கணேஷ்பாபு கோரிக்கை வைக்கிறார். அந்தக் கோரிக்கை குடும்பத்தாரால் நிறைவேற்றப்பட்டதா? கணேஷ்பாபு தன் குடும்பத்தின் பாரம்பரிய கட்டிலை காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை
தயாரிப்பாளர் கணேஷ்பாபு நடிகனாக ஓரளவு தன்னை மெருகேற்ற முயற்சித்துள்ளார். நாயகி ஸ்ருஷ்டிடாங்கே நிறைமாத கர்ப்பிணியாக வருகிறார். கட்டிலுக்காக அவர் உருகும் காட்சிகள் சற்று ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ஒகே தான். ஏனைய நடிகர்களில் பத்திரிகையாளர் செந்தில் குமரன் மட்டுமே கவனம் ஈர்க்கிறார். மற்றவர்களின் நடிப்பில் மிகைத்தன்மை அதிகம்
ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில் கணம் சேர்க்க முயற்சித்துள்ளார். மகாகவி பாரதியார், வைரமுத்து, மதன் கார்க்கி வரிகளில் படத்தில் எல்லாப்பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் படத்தின் வறுமையை தன் கேமராவில் கூடுமான வரை மறைத்துள்ளார். எடிட்டர் படத்தை இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். படத்தில் பெயருக்கு மட்டுமே ஆர்ட் டைரக்டர் வேலை செய்துள்ளார் போல.
தன் வீட்டு கட்டிலை காப்பாற்ற ஒரு குடும்பஸ்தன் போராடுவதே கதை என்பது மட்டும் இல்லாமல், ஒரு குழந்தை செண்டிமெண்டையும் வைத்து கதை பின்னியுள்ளனர். மெயின் கதை சற்று புதுமையாக இருந்தாலும் படத்தின் ட்ரீட்மெண்டில் எந்தப்புதுமையும் இல்லை. நாடக பாணியிலான மேக்கிங்-ஐ தவிர்த்திருந்தால் இந்தக் கட்டில் நம்மை தாலாட்டியிருக்கும்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்