“மண்குளிரும் இந்தப்பனிக்கால சூழலில் மனங்குளிரும் வகையில் முழுக்க முழுக்க மண் வாசனையோடு ஓர் கிராமத்துச் சினிமா.
கருப்பங்காட்டு வலசு என்ற ஓர் கிராமம். அங்கு சில வித்தியாசமான மனிதர்கள். வித்தியாசமானவர்கள் என்றால் ஏலீயன்ஸ் ரேஞ்சிற்கு யோசிக்க வேண்டாம். நாகரீக உலகத்தை ஏற்றுப்பாராத மனிர்கள் அவ்வளவு தான். மனிதர்கள் என்றால் அங்கு நல்லோரும் பொல்லோரும் வல்லோரும் என எல்லோரும் இருப்பார்கள் தானே?
அப்படியான மனிதர்கள் சூழ் கிராமத்தில் நான்கு மரணங்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுகின்றன. அந்த மரணங்களுக்கு காரணமானவர்கள் யார்? என்ற விடை தான் கருப்பங்காட்டு வலசு. பச்சைக்கிளி மலர்க்கொடி இருவரின் உயிர்ப்பான காதலோடு துவங்கும் படம், ஊரில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக ஊர் நாட்டாமையின் மகள் முயற்சிக்கும் காட்சிகளோடு வளர்கிறது. மேலும் கிராமங்களிம் இன்னும் வேரூன்றி இருக்கும் சாதிவெறியையும் படம் பதிவு செய்கிறது. அதற்காகவே ஒரு காதல்ஜோடி படத்தில் இருக்கிறார்கள்.
படத்தின் களம் மொத்தமும் ஒரு கிராமம் என்பதால் *கூறியது கூறல்* என்ற குற்றத்தை அங்கங்கே இயக்குநர் செல்வேந்திரன் செய்திருக்கிறார். ஆனாலும் அவை பெரிதாக சலிப்புத் தட்டவில்லை. கேமராமேன் ஷ்ரவன் சரவணன் மிக அழகான உழைப்பைக் கொடுத்து கண்களுக்கு ஒரு அச்சு அசல் கிராமத்தின் அழகைக் கொடுத்து விருந்து வைத்திருக்கிறார். ஆதித்யா, சூர்யா இருவரின் இசையில் பாடல்கள் பின்னணி ஸ்கோர் இரண்டுமே அழகியல் உணர்வியல்.
கதையின் நாயகனாக வரும் எபினேஷர் தேவராஜ் எதார்த்த முகம், தேவைக்கேற்ற நடிப்பு என ஈர்க்கிறார். நாயகி நீலிமா இசை மிக அற்புதமாக நடித்திருக்கிறார். கதையின் ஒரு முக்கியமான திருப்பம் அவரின் கேரக்டரால் வருவதை நன்றாகவே ரசிக்க முடிகிறது.
வசனங்களில் மண்மனம் தெறிக்கிறது. ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட்டில் ஒரு கிரைம் கதையை சொல்ல நினைத்த அந்த ஆர்வத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். குறைகளும் கேள்விகளும் படத்தில் நிறைய இருக்கின்றன தான். ஆனால் இந்த டீமின் முதல் முயற்சி இது என்பதாலும் பிழைகள் இருந்தாலும் படம் ஈர்க்கிறது என்ற நிஜத்தாலும் நாம் கருப்பங்காட்டு வலசுக்கு ஒரு ட்ரிப் போகலாம்