கதைகளோ கட்டுரைகளோ பாலகுமாரன் எழுதினால் பால்கோவா சுவை தான்.
வாசிப்பு உலகத்திற்குள் நுழைய ஆசைப்படுபவர்களுக்கு துணிந்து முதலில் பாலகுமாரனை அறிமுகப்படுத்தலாம். எளிமையான சொற்கள் ஈசி வாக்கியமாக மண்டைக்குள் ஏறியமரும்.
இது ரொம்ப நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட நூல். தன் சினிமா அனுபவங்களை பாலகுமாரன் எழுதியிருப்பதே அதன் காரணம்
லேசாக நமக்குள் எரியும் சினிமா ஆசையை சாதித்தவர்கள் யாரேனும் தீண்டி விட்டால் அது பற்றியெரிய துவங்கிடும். “ஒரு பிடி பிடிச்சீங்கன்னா” என்று இயக்குநர் பாக்கியராஜ் ஊக்குவித்ததின் விளைவாக பாலகுமாரன் சினிமாவிற்குள் வருகிறார்.
“உங்க ரெண்டு wife-ம் நல்ல சிந்தட்டிக் புடவை கட்டுறாங்க..வாடகை வீடானாலும் மொசக்கை போட்ட வீடு, டான்னு மாதாமாதம் உறுதியான சம்பளம், நாவல் எழுதுற மூலமா நல்ல புகழும் இருக்கு! நீங்க ஏன் இப்ப சினிமாவிற்கு வரணும்?”னு கமல்ஹாசன் பாலகுமாரனிடம் கேட்கிறார். பால குமாரன் அதற்கு ஒரு காரணம் சொல்கிறார். ஹைலட்!
கவிதாலயாவில் உதவி இயக்குநராக சேர்ந்த பின் உடைபட்ட ஈகோவையும், பெரு உழைப்பை வேண்டி நிற்கும் சினிமா வெற்றியையும், சிந்துபைரவி படப்பிடிப்பு சம்பவங்களையும், இளையராஜா சொல்லித் தந்த வாழ்க்கை & கரியர் பாடங்களையும் பாலகுமாரன் அழகாக பகிர்ந்துள்ளார்
பாலகுமாரன் சினிமாவில் பெரிதாக கொடி கட்டாவிட்டாலும் அங்கு கிடைத்த படிப்பினைகளே கொடுப்பனை என்ற புரிதல் அவருக்கு இருந்திருக்கிறது. மேலும் இதே நூலில் இரு குறுநாவல்களும் உள்ளன
வில்வமரம் என்ற கதை அய்யர் குடும்பப் பின்னணியைக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. வழக்கம் போல் தத்துவங்கள் அடங்கிய ஒரு குடும்பக்கதை. கஞ்சிக்கு வழியற்ற பிராமணக் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மணமுடித்து வருகிறாள். கணவனை கைக்குள் அடக்குகிறாள். அவள் வெளிவந்த பின் அவள் பிறந்தவீடு பிரகாசிக்கிறது. அவள் பிறந்த வீட்டின் உடன்பிறப்புகள் எட்டிய உயரத்தை எண்ணி விம்முகிறாள். தான் வந்த நிலையை மறந்து பிறர் சென்ற நிலையில் மனதை செலுத்தி சொந்த நிலையில் நிம்மதி இழக்கிறாள். பின் ஒரு நல்ல புரிதலோடு இந்தக் கதை முடிகிறது. பல இடங்களில் லா லா டைப்-ஆக இருந்தாலும் Feel good உணர்வு கிடைத்தது
அடுத்த கதை பொய்மான்
தொழிலில் ஓஹோ வென கொடிகட்டிப் பறக்கும் கணவன் மனைவி. கணவனுக்குள் இருந்த பழையகாதலியை மனைவி மீட்டெடுக்க ப்ளாஷ்பேக் ஓப்பனாகி கதை ட்ராவலாகிறது. ரொம்பவே கிரிஞ்ஞ்ஞ்ஞ் டைப் கதைன்னாலும் ரெண்டு இடத்துல பொசுக்குன்னு கண்ணீர் வந்துட்டு. அடிபட்டவன் நிமிர்ந்து எழும் அத்தியாங்கள் எப்படி இருந்தாலும் நம் மனம் எழுச்சி அடையவே செய்கிறது..போகிற போக்கில் சில கேரக்டர்கள் பேசும் ப்ளாசபி செம்ம ருசி
சாம்பிள் ஒன்று
வலிமை காட்டுவது மட்டுமா காமம்?
வசமிழத்தல் அல்லவா காமம்!
காமத்தில் வசமிழந்து காலத்தை வசப்படுத்துவோமாக