Tamil Movie Ads News and Videos Portal

இறுதிப்பக்கம்- விமர்சனம்

கொத்துக்கொத்தாய் இறங்கும் வாராந்திரப்படங்களில் சில அத்திப்பூக்களும் பூப்பதுண்டு. அப்படியொரு பூ இறுதிப்பக்கம். படத்தின் மையக்கரு “படுக்கையகம்” சம்பந்தப்பட்டது என்றாலும் சல்லிக்காசுகளை கொண்டே கில்லி போல திரைக்கதையில் விளையாண்டிருக்கிறார் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன்

முதல் ஷாட்டிலே கதைக்குள் செல்லும் படங்கள் பெரும்பாலும் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும். லாஸ்ட்பேஜில் அது நடந்திருக்கிறது.ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம் கிரிஜா ஹரி உள்ளிட்ட திரைமாந்தர்கள் யாவரும் ஓவர் நடிப்பால் உறுத்தாமல் கதையடியிலே தன்னை ஒப்புவித்திருக்கிறர். மகிழ்ச்சி

“கற்பனையை எழுதுனா அழகா இருக்கும். உண்மையை எழுதினா தான் எதார்த்தமா இருக்கும். சோ நான் உண்மையை எழுதணும்னு ஆசைப்படுறேன். அப்ப என் கதைகளில் வர்ற சம்பவங்களும் கேரக்டர்களும் உண்மையா இருக்கணும். சோ அந்த கேரக்டராக மாறி அக்கேரக்டர் செய்யும் “சம்பவங்களை” நானே செய்து எழுதுவது தான் சரின்னு எனக்குத் தோணுது. அதான் என் ஸ்டைல்” படத்தில் நாயகி பேசும் வசனத்தின் சாரம்சம் இது. படத்தின் தலைமைக் கதாப்பாத்திரமான நாயகி ஒரு எழுத்தாளர் என்பதாலோ என்னவோ வசனங்களில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். அவையெல்லாம் கவனிக்கும் படியாக இருக்கிறது

இயல் என்றால் இயற்கை. இயற்கை யாருடைய கட்டளைகளையும், எவருடைய வேண்டுதல்களையும் பொருட்படுத்தாது. படத்தின் நாயகி இயல் அப்படித்தான் வாழ்கிறாள். இது தப்பிதமான நடத்தை என கற்பிதம் செய்தாலும்…இதை நான் பொதுவான சரியென்றால் தானே தப்பு. எனக்கு இது சரியாக தோணுது” என்று இயல்பாக இயல் எடுத்துரைக்கிறாள்.

தனக்கு அநீதியை ஏற்படுத்தி இருப்பவர்களை இயல் பழிவாங்க எடுக்கும் ஆயுதம் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. இதுதான் திரைக்கதையை வெகு சுவாரசியமானதாக மாற்றிருக்கிறது.படத்தின் தரத்தில் பட்ஜெட் தெரிந்தாலும் படம் பேசும் அறத்தில் மாறுபாடு இருந்தாலும் , “ஒரு சிறிய டீம் நிகழ்த்திருக்கும் திரையனுபவம் நிச்சயம் நாம் கொண்டாடக்கூடியது.இறுதிப்பக்கத்தை வரவேற்போம்

-மு.ஜெகன் கவிராஜ்