சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர்.விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது,
“பாடலைப் பார்த்தோம் மிக நன்றாக உள்ளது.இங்கே ராஜன் சார் வந்துள்ளார். அவர் தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாக குரல் கொடுப்பவர் இப்படித் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் . மனதில் பட்டதை எப்போதும் தைரியமாகச் சொல்லி வருகிறார் .உங்கள் அருமை இப்போது தெரியாது. தொடர்ந்து குரல் கொடுங்கள் .
இங்கே யோகேஸ்வரனின் திறமையைப் பார்த்தோம். திறமை இருந்தாலும் பெற்றோர்கள் ஊக்கமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். அனைவருக்கும் பெற்றோர்கள் ஓரளவுதான் முன்னே கொண்டுவர முடியும். அதற்குப் பிறகு தன்னுடைய சொந்தத் திறமையால் உழைப்பால்தான் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் பிரகாசிக்க முடியும். அப்படி இரண்டு தளபதிகளைச் சொல்லலாம் இளைய தளபதி விஜய் தளபதியாக இருந்து பல வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு அவரது தந்தை ஆரம்பத்தில் தூண்டுகோலாக இருந்தார்.அதுபோல்தான் தளபதியாக இருந்து தலைவராக மாறி இப்போது முதல்வராக இருக்கும் அவருக்கும் தந்தை ஒரு தூண்டுகோலாக இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரது உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்திருக்கிறார். அவர்களின் தந்தை ஆரம்பத்தில் ஒருதொடக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.” என்று பேசிய பேரரசு இந்தக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்