1941-ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஜப்பான் பர்மாவின் தலை நகரமான ரங்கூனில் குண்டு போட உத்தேசிக்கிறது. இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய அந்த நேரத்தில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்த ஜனங்கள் யாத்திரைக்கு தயாராகிறார்கள். அவர்களோடே பயணம் செய்துள்ளார் நூலாசிரியர் சர்மா. பர்மாவில் பத்திரிகை நடத்தியும் எழுத்தாளராகவும் பரிணமித்த மனிதர் தன் மனைவியோடு ஒரு பாவ யாத்திரை மேற்கொள்கிறார். அந்தப் பயண அனுபவம் தான் இந்த மொத்த நூலும்
“பொருள்தேடி வேர் பிரிதல்” என்பது சங்ககாலம் தொட்டே நிலவும் வாழ்க்கைப் பாடு! சென்ற இடத்தில் என்னதான் வேர்ப்பிடித்து வளர்ந்தாலும் ஒரு அந்நியத்தன்மை எப்போதுமே உள்ளத்தில் கிடக்கும். அங்கும் படரும் வேர் எப்போது வேண்டுமானாலும் அறுக்கப்படலாம். அப்படி அறுபட்ட வேரோடு ஊர் தாண்டும் மனிதர்களின் மனக்குமுறல் சொல்லில் அடங்காதது. ஒரு வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வை விவரிக்கும் நூல் தான் எனினும் அதில் அரசியல் வரலாறை அறிந்துகொள்ள முடியும். “புயலிலே ஒரு தோணி” நாவலின் வீரியம் இதில் இல்லாவிட்டாலும் பர்மா போர் சமயத்தில் மக்கள் எத்தகைய அவதிகளைச் சந்தித்து ஊர் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிய இந்த நூல் உதவும்.
எழுத்தில் முழுமையாக உணர்ச்சி கூடி வராவிட்டாலும் தகவல்களாக வொர்த்து!