‘பிகில்’ படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் விஜயையும் விசாரிக்க முடிவெடுத்து, நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர்
விஜயை தேடிச் சென்றது கமிஷ்னர் கிருஷ்ணகாந்த் தலைமையிலான வருமான வரித்துறை அதிகாரிகள் குழு. அங்கு நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் விசாரனைக்கு வருகிறேன் என்று கூற அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்ததோடு, உடனடியாக வரும்படி வலியுறுத்தினர். சரி நீங்கள் செல்லுங்கள். நான் என்னுடைய காரில் உங்களை பின் தொடர்கிறேன்..” என்று கூறியதையும் ஏற்க மறுத்து, அவர்கள் சென்ற இன்னோவா காரிலேயே நடிகர் விஜயை ஏற்றிக் கொண்டு சென்னை விரைந்தனர். இதனால் படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு, படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.