Tamil Movie Ads News and Videos Portal

இயக்குநர் ராம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரி !

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். “ரிச்சி” படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.

இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது..

தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
“மாநாடு” படத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். கும்மிடிப் பூண்டி அருகே அமைந்துள்ள “ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டி” படப்பிடிப்புத் தளத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இன்று எதிர்பாராத வருகை தந்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

மேலும் இயக்குநர் ராம், நிவின்பாலி மற்றும் சூரி உள்ளிட்ட படக்குழுவினருடன் உரையாடி படப்பிடிப்புத் தளத்தை தனது வருகையால் கலகலப்பாக்கினார் இயக்குநர் மிஷ்கின். படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற உள்ளது.