வாசகனைச் சஞ்சலப்படுத்தும் எந்த எழுத்து வடிவமும் நமக்கு ஒவ்வாது. அப்படித்தான் நவீனக்கவிதைகளும் நமக்கு லைட்டா அலர்ஜி.
தோழர் ஒருவர் ஆத்மாநாம் கவிதைகளை வாசிக்கச் சொன்னார்.
இந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சில புடம் போட்டு பார்த்தன. அவ்வளவு எளிதில் கவிதையை உள்வாங்கிச் செரிக்க இயலவில்லை. ஆனால் போகப்போக சில அற்புதங்கள் நிகழ்ந்தன
வெளியேற்றம் என்ற தலைப்பில் ஒரு கவிதை
“சிகரெட்டிலிருந்து வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலியே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவு தானே”
சின்னச் சின்ன சிலிர்ப்பைத் தரும் கவிதைகள் அடங்கிய நூலில் கவிஞனின் அகம்/புறம் சார்ந்த நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள் நிறைய வெளிப்படுகிறது. ஒரு தீர்மானத்தை கொள்ளாத கவிஞனின் உளவியலை ஆத்மாநாமிடம் காண முடிகிறது
34 வயதில் தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாமின் தேவை என்னதாக இருந்ததோ? இன்று நவீன கவிதை சார்ந்து முயற்சி எடுக்கும் இளைஞர்கள் ஆத்மாநாமை ஆதர்சமாக எண்ணுகிறார்கள். இப்படியான கவிஞனுக்கு வாழ்வில் நிறைவுக்கு பஞ்சம் ஏற்பட்டது சோகமானது.
இந்த நூலில் என்னை மிகவும் ஈர்த்த மற்றொரு அம்சம், ஆத்மநாம் கவிதைகளைப் பற்றிய உரையாடல்களை 18 பக்கங்களில் கொடுத்திருப்பது. உரையாடுபவர்கள் யுவன் சந்திரசேகர் மற்றும் சுகுமாரன். ஆத்மாநாம் கவிதைகளை முன் வைத்து இவர்கள் இருவரும் பேசியிருக்கும் விசயங்கள் நிறைய திறப்புகளை தருகிறது
ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி யுவன் சந்திரசேகர், “ஆத்மாநாம்கிட்டே வரும்போது வார்த்தைகளும், வாக்கியங்களும் ஒரு பிறழ்வு நிலையில் போக ஆரம்பிக்குது. நவீன கவிதைகள் அறிமுகம் ஆனப்போ பொதுவாசகரை எப்படி மிரள வைச்சதோ, அதுமாதிரியே ஆத்மநாம் கவிதைகள் அந்தக் காலகட்டத்திலயும், ஏன், இன்றைக்குப் புதிதாக வாசிக்க வருபவர்களையும் கூட, மிரட்டத்தான் செய்கிறது” என்று குறிப்பிடுகிறார்
அடியேனும் இதில் உடன்படுகிறேன்..
சற்று சிரமம் ஏற்று வாசித்தால் ஆத்மநாம் கவிதைகள் உங்களை ஈர்க்கலாம்